Monday, 20th May 2024
ebook தொடர்புக்கு : +91 - 9444983174
தஞ்சாவூர்: தஞ்சாவூரில் ஆளுநர் பன்வாரிலால் புரோகித்துக்கு எதிராக கருப்பு கொடி காட்ட முயன்ற ஏராளமான விவசாயிகள் கைது செய்யப்பட்டனர். இதையடுத்து, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஒரத்தநாடு, பட்டுக்கோட்டை உள்ளிட்ட இடங்களில் 100க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர். தமிழ் பல்கலைக் கழகத்தில் நடைபெற உள்ள பட்டமளிப்பு விழாவில் பங்கேற்க ஆளுநர் பன்வாரிலால் வருகை தர உள்ளார். கஜா புயலால் கடந்த ஆண்டு தஞ்சை மாவட்டம் கடுமையாக பாதிக்கப்பட்டது. இது தொடர்பாக விவசாயிகள் தஞ்சை உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் போராடி வந்தனர்.
இதன் தொடர்ச்சியாக மாவட்ட ஆட்சியரை சந்தித்து பலமுறை கோரிக்கை மனு அளித்துள்ளனர். அதில், மின்னிணைப்பு மற்றும் சாலை வசதிகளை அமைத்து தரக்கோரி வேண்டுகோள் விடுத்தனர். பல்வேறு இடங்களில் குடிமராமத்து பணிகளில் ஊழல் உள்ளிட்ட முறைகேடுகள் நடப்பதை தடுத்து நிறுத்த வேண்டும் என கோரிக்கை வைத்தனர். இதனிடையே, தஞ்சை மாவட்டம் தமிழ் பல்கலைக்கழகத்தில் 12வது பட்டமளிப்பு விழாவிற்கு தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் இன்று கலந்து கொள்கிறார். அதற்கான ஏற்பாடுகளும் செய்யப்பட்டு வருகின்றனர்.
இந்த நிலையில், தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தியும், ஆளுநர் வருகைக்கு எதிர்ப்பு தெரிவிப்பதற்காக நெற்று இரவு முதல் பல்வேறு பகுதிகளில் தமிழ்நாடு விவாசாய சங்கத்தினர் குழுமி இருந்தனர். இந்த தகவல் அறிந்த காவல்துறை, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஒரத்தநாடு பகுதிகளில் நேற்று இரவே 30க்கும் மேற்பட்ட விவாசாயிகளை கைது செய்தனர்.
தஞ்சை நாஞ்சிக்கோட்டை, ஒரத்தநாடு பல்வேறு பகுதிகளில் இருந்து ஆளுநருக்கு எதிராக கருப்புக்கோடி காட்ட முயன்ற போது, அந்தந்த பகுதிகளில் விவசாயிகள் தடுத்து நிறுத்தப்பட்டனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. மேலும், ஆளுநர் வருகை தரும் நாஞ்சிக்கோட்டை சாலையில் அவருக்கு எதிராக கறுப்புக்கொடி காட்ட 20க்கும் மேற்பட்ட விவசாயிகள் வந்துள்ளனர். இதையடுத்து அவர்கள் கைது செய்யப்பட்டனர்.